Friday, May 29, 2009

உதவுங்களேன்

தீஷுவிடம் சேட்டைகளும் விஷமங்களும் குறைவு. அவள் செய்வது நமக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டால் போதும், பொதுவாக அதைச் செய்யமாட்டாள். ஆனால் இப்பொழுது சில நாட்களாக அவளின் சில செயல்களில் மாற்றங்கள் கொண்டுவர முயல்கிறோம். ஆனால் அவளிடம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. சில பழக்கங்களில் நாட்கள் போனால் மாற்றம் வரும் என்றாலும் வருமா என்ற சந்தேகமும் உள்ளது.

1. நாங்கள் தீஷுவை டா போட்டுக் கூப்பிடுவது வழக்கம். இப்பொழுது அந்தப்பழக்கம் அவளுக்கு வந்து விட்டது. என்னிடம் வந்து ஒரு தோழி போல் என்னடா ஆச்சி என்பது அழகாய் இருந்தாலும், தன் தந்தையை கவுண்டமணி தோரணையில் டேய் அப்பா எனும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. சொல்லிப் பார்த்தாகி விட்டது. அதுவும் பிறர் முன்னிலை அழைக்கும் பொழுது இன்னும் கஷ்டமாக இருக்கிறது. நானும் அவளை டா போட்டுக் கூப்பிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அவளிடம் மாற்றம் இல்லை.

2. அனைவரையும் மரியாதை இல்லாமல் வா போ என்றே கூறுவது. அவளுக்கு மரியாதைப் பற்றியெல்லாம் தெரியாது என்றாலும் வயதானோரை அழைப்பது கஷ்டமாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் முன்னிலையிலேயே மரியாதையாகச் சொல் என்றால் மாட்டேன் என்கிறாள். அது இன்னும் கஷ்டம்.

3. தீஷு யாரிடமும் அதிகமாக பழக மாட்டாள். அதுவும் புதியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவளிடம் கேள்வி கேட்டால், அவள் பதில் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம். மிகச் சில நேரங்களில் பதில் சொல்லுவாள். இல்லையேல் நான்கைந்து முறை கேட்டப்பின் வேறு வழி இல்லாமல் நான் பதில் சொல்லுவேன். இப்பொழுது இந்தப் பழக்கம் மிகத் தெரிந்தவர்களிடமும் தொடர்கிறது. நான் என் கணவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்கிறாள். பிறர் கேட்டால் அவர்கள் முகத்தையேப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அவர்கள் பேசுவது புரியவில்லையா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் கேள்வியை நான் திரும்பக் கேட்டால் என் முகம் பார்த்து பதில் வருகிறது.

4. அவளுடைய பொம்மையைக் குளிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கையிலேயே வைத்திருக்கிறாள். அந்தப் பொம்மையைத் துவைக்கவும் முடியாது. வாங்கும் பொழுதே அது தான் வேண்டும் என்று வாங்கி விட்டாள். ஒரு முறை என் அம்மா துவைத்தார்கள். ஆனால் அது அடிக்கடி துவைத்தால் தாங்காது. அதில் எத்தனை கிருமிகள் இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது. மேலும் அதை வெளியே எடுத்துச் செல்லும் பொழுது அழுக்கு பொம்மையைப் பார்க்க அசிங்கமாகவும் இருக்கிறது. வேற பொம்மை மாற்றவும் விட மாட்டேன் என்கிறாள். ஒளித்து வைத்தாலும் அவளுக்குத் தெரிந்து விடுகிறது.

தீர்வு சொல்லுங்களேன்.

Thursday, May 28, 2009

Is there?

மாக்னெட்டிக் எழுத்துக்களாலான இரண்டு இலக்க எண்களை தீஷு வாசிக்கப்பழகிவிட்டதால், இன்று அடுத்த படியாக, நான் சொல்லும் எண்களை நோட்டில் எழுதச் சொன்னேன். 20, 70 போன்று பூஜ்ஜியத்தில் முடியும் எண்களை எழுத சிரமப்பட்டாள். மற்றபடி சரியாக எழுதினாள். 10,20 என்று வரிசையாகச் சொல்லி பூஜ்ஜியத்தில் முடியும் எண்களை மட்டும் ஒரு முறை எழுத வைத்தேன். இதுப்போல் தினமும் தொடர்ந்து செய்யும் எண்ணம் உள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் மாக்னெட்டிக் எழுத்துக்களால் எண்களை அறிந்து கொண்டதால், ஆங்கில வார்த்தைகளும் அவ்வாறே கற்றுத் தரலாம் என்று எண்ணினேன். இன்று IS & AS வைத்து பொனிடிக்ஸ் முறையில் வாசித்துக் காட்டினேன். ஒர் அளவு அவளாக சொல்ல ஆரம்பித்ததும், அவளுடைய புத்தகத்தில் IS வரும் இடங்களை மட்டும் சுட்டிக்காட்டச் சொன்னேன். இதன் மூலம் தான் வாசிப்பது போன்ற மகிழ்ச்சி அவளுக்கு வரும் என்பது என் எண்ணம். மூன்று நான்கு பக்கங்கள் தேடியப்பின் அவளுக்கு ஆர்வமிருக்கவில்லை.

Patterns நாங்கள் முன்பே பல முறை செய்திருக்கிறோம். ஞாபகப்படுத்தவும் அடுத்த படிக்கு எடுத்துச் செல்லவும் இன்று செய்தோம். முதலில் எப்பொழுதும் போல் AB pattern செய்து முடித்தப்பின் ABC மற்றும் AAB செய்தோம். ABCக்கு மூன்று வகையான பொருட்கள் எடுத்துக் கொண்டு மூன்றையும் அடுத்து அடுத்து வைக்க வேண்டும். AABக்கு இரண்டு வகை பொருட்கள். முதலில் முதல் வகையை இரண்டு தரம் வைத்து விட்டு இரண்டாவது வகையை ஒரு முறை வைக்க வேண்டும். இப்படியே தொடர வேண்டும். இரண்டையும் விருப்பமாக செய்தாள். அடுத்து நான் ஒரு pattern வைத்து, அவளைத் தொடரச் சொல்ல வேண்டும். நான் வைத்திருக்கும் patternயைக் கண்டுபிடித்துத் தொடர வேண்டும். இது சற்று சிரமமானது. முயற்சித்துப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். அவளுக்கு விரும்பமிருந்தால் தொடருவோம்.

Wednesday, May 27, 2009

Odd man out

ஒரு செருப்பைக் காலில் போட்டும் ஒன்றை போடாமலுமிருந்த தீஷு என்னிடம் வந்து இரண்டும் சேமா (Same) அல்லது டிபரண்டா (Different) என்றாள். சேம் என்றேன். இல்லை. ஒன்று போட்டிருக்கேன். இன்னொன்று போட வில்லை. அதனால் டிபரண்ட் என்றாள். சேம், டிபரண்ட் ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னது.

இதின் அடுத்த கட்டமாக odd man out செய்யலாம் என்று நினைத்தேன். மூன்று பொருட்கள் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டை ஒன்று போல் வைத்து விட்டு, ஒன்று வித்தியாசமாக வைக்க வேண்டும். எது வித்தியாசம் என்று சொல்ல வேண்டும். எளிதாக செய்வாள் என்று நினைத்தேன்.

Alphabets எடுத்துக் கொண்டோம். இரண்டு lower case ஒன்று upper case வைத்து, எது டிபரண்ட், எதற்கு என்று விளக்கினே. அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேர முயற்சிக்குப் பின் அவளுக்குப் புரியாததால், இரு ஒன்று போலுள்ள கிண்ணங்களும், இரு ஒன்று போலுள்ள ஸ்பூனும் எடுத்துக் கொண்டேன். இரண்டு ஸ்பூனையும் வைத்து சேம், டிபரண்ட் கேட்டேன். அதைச் சரியாக சொல்கிறாள். ஆனால் ஒரு கிண்ணத்தைச் சேர்த்தவுடன் புரியவில்லை. சில நேரங்களில் பதில் சரியாக சொன்னாலும், அது Guess work என்று எனக்குப் புரிந்தது. சில பழைய செயல்முறைகள் செய்தப்பின் அதைச் செய்ததால் எனக்கும் புதிய முறையில் விளக்க ஆர்வமிருக்கவில்லை. சிறிது நாட்கள் கழித்து முதல் ஆக்டிவிட்டியாக இதை முயற்சிக்க வேண்டும்.
Labels: Getting ready for Maths draft

மருதாணி


போன வாரம் எதிர் வீட்டிலுள்ள வட இந்திய ஆண்டி மருதாணி இட்டிருந்தார். தீஷுவைப் பார்த்தவுடன் கையைக் காட்டி இந்தியில் அவர் பெண் வந்தவுடன் போட்டு விட சொல்கிறேன் என்றார். அவர் சொன்னது புரியாவிட்டாலும், அவர் கையில் இருந்த சிவப்பு பூக்கள் அவளுக்குப் பிடித்துவிட்டன. அதன் பின் தினமும் அக்கா எப்ப போட்டுவிடுவா என்று கேட்டுக் கொண்டிருந்தாள். நான்கைந்து நாட்களுக்கு முன்னால் மேல் வீட்டில் இருப்பவர் வேறு ஏதோ வீட்டில் அரைத்த மருதாணி தனக்காக வாங்கி வந்ததை எங்களுக்குக் கொஞ்சம் கொடுத்தார். அது தீஷுவிற்கு காலில் மட்டும் போட முடிந்தது. காலில் போட்டு முடித்ததும், தான் மருதாணி போட்டிருப்பதை என் தங்கைக்குப் போன் செய்து சொன்னாள். மருதாணி அவள் காலில் அரிப்பது போல் இருக்கிறது என்று ஒரு மணி நேரத்தில் எடுத்தும் விட்டாள். ஆனால் சிவந்திருந்தது. இவ்வளவு ஆசையாக உள்ளாளே என்று சென்ற வாரயிறுதியில் மருதாணி கோன் வாங்கி வைத்தேன். நேற்று தான் வைக்க நேரமிருந்தது.

வைக்க ஆரம்பித்த சிறிது விநாடிகளில் கையை நீட்டிக் கொண்டேயிருப்பது வலிக்கிறது என்றாள். சரி என்று ஏதோ டிஸேன் போட்டு விட்டேன். இரண்டாவது கையில் பட்டர்ஃபளை போட வேண்டும் என்றாள். பாதத்தில் கூட போட வேண்டும் என்றதால் போடப்பட்டு, தந்தையால் படுக்கைக்குத் தூக்கிச் செல்லப்பட்டாள். கையை தூக்கியே வைத்திருந்தாள். நானும் வலிக்கும் என்று சொல்லிப்பார்த்தேன். பிரயோஜனமில்லை. கையில் முத்தம் கொடுத்தவுடன், விரல் கிட்ட குடுத்திடாத, மருதாணி அழிச்சுடும் என்றாள். இப்படி மருதாணி நினைப்பிலேயே தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்தவுடன் பச்சையாக இருந்ததைப் பார்த்து அழுகை வந்துவிட்டது. மருதாணியைக் கழுவியவுடன் சிவப்பை பார்க்க பார்க்க முகத்தில் சந்தோஷம். சில நிமிடங்களில் என்னிடம் வந்து "மருதாணி பிடிக்கல.. கையிலிருந்து எடுத்து விடு.. எனக்கு வேண்டாம்" என்று அடுத்த அழுகை ஆரம்பமானது.

Tuesday, May 26, 2009

கண்டுபிடி...

சப்பாத்தி மாவு பதத்திற்கு கோதுமை மாவை பிசைந்து கொண்டேன். சோழி, புளிங்கொட்டை, உளுத்தம் பருப்பு, சிறிய பொட்டு, பூண்டு போன்றவற்றை இரண்டு இரண்டாக எடுத்துக் கொண்டேன். அனைத்திலும் ஒன்றை மாவில் ஒளித்து வைத்து விட்டேன். மற்றொன்றை தட்டில் வைத்து விட்டேன். மாவிலுள்ளதை கண்டுபிடிக்க வேண்டும். மாவினுள் என்ன இருக்கிறது என்று தெரிவதற்குத் தட்டில் அதன் ஜோடியை வைத்திருந்தேன். நான் பொட்டு கண்டுபிடிப்பது கஷ்டம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பருப்பைக் கண்டுபிடிக்கத் தான் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. தீஷு திரும்ப திரும்ப கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செய்திருப்பாள். நேற்று முழுவதும் அதைப் பற்றி தான் பேச்சு. இன்று காலை எழுந்தவுடன் முதல் கேள்வி - பால் குடிச்சி முடிச்சவுடனே மாவில கண்டுபிடிப்போமா? என்று. இது கை விரலுக்கான பயிற்சி.

இது துணி வகைகளைப் பொருத்தியது போன்றது. உப்புத்தாளில் வெவ்வேறு வகையில் எடுத்து இரண்டு இரண்டு சதுரமாக வெட்டிக் கொண்டேன். அவளே அவள் வேலையை சரி செய்து கொள்வதற்காக ஜோடிகளின் பின்னால் ஒத்த வடிவத்தை வரைந்து கொண்டேன். ஒரே வகையான தாளைப் பொருத்த வேண்டும். விருப்பமாக செய்தாள் என்று சொல்ல முடியாது. ஒரு முறை பொருத்தி முடித்தவுடன், சரியாக செய்திருக்கிறாளா என்று பின்னால் வரைந்திருந்த வடிவங்களை வைத்து பார்க்கச் சொன்னேன். அடுத்த முறை பொருத்துவதற்கு முன்னாலே வடிவத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். இது தொடு உணர்வுக்கானப் பயிற்சி.

Thursday, May 21, 2009

காந்தவியல்

தீஷு இரண்டு இலக்க எண்களை வாசிப்பதால், இன்று அதற்கு அடுத்த படி செய்தோம். எப்பொழுதும் நான் மாக்னெட்டிக் எழுத்துக்களால் எண்களை வைத்து, அவளை வாசிக்கச் சொல்வேன். ஆனால் இன்று நான் சொல்லும் எண்னை அவள் வைக்க வேண்டும். முதலில் இரண்டாவது இலக்கத்தை முதல் இலக்கமாக வைத்தாள். சொன்னதும் புரிந்து கொண்டாள். கிட்டத்தட்ட 15 எண்கள் வரை செய்திருப்போம். அனைத்தையும் சரியாக செய்தாள்.



மாக்னெட்டிக் எழுத்தை வைத்தே பொருட்களை magnetic / non-magnetic என பிரித்தோம். நான் பொருட்களைத் தட்டில் எடுத்துத் தராமல், வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் காந்தத்தால் தொட்டு, magnetic / non-magnetic என சொல்லச் செய்தேன். சரியாக செய்தாலும் மாக்னெட்டிக் என்ற வார்த்தையை சொல்லத் தெரியவில்லை.



மாண்டிசோரி முறையில் அனைத்து புலங்களின் மூலம் கற்கிறோம் என்பது அடிப்படை. தொடு புலனுக்கு இந்தப் பயிற்சி மாண்டிசோரி புத்தகங்களின் இருந்தது. வெவ்வேறு வகையான துணிகளை(தையல் கடையில் கேட்டு வாங்கினேன்), ஒவ்வொரு வகையையும் இரண்டு 15cm சதுரங்களாக வெட்டிக் கொண்டேன். இரண்டு கிண்ணிங்களில் வைத்து விட்டேன். கண்னைக் கட்டிக் கொண்டு, முதல் கிண்ணத்திலிருந்து ஒரு துணியை எடுத்து, அடுத்த கிண்ணத்திலிருந்து அதற்கு இணையானதை எடுக்க வேண்டும். முதலில் இரண்டு வகையான துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு இணைத்தோம். புரிந்து கொண்டவுடன் 4 வகை செய்தோம். அடுத்து நான் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு துணி கொடுத்தவுடன், இரண்டும் ஒரே வகையா இல்லையா என்று சொல்ல வேண்டும் என்றேன். அனைத்தையும் விருப்பமாக செய்தாள். முடித்தவுடன் அனைத்துத் துணிகளையும் எடுத்து, எல்லா துணியும் காஞ்சிருச்சு, மடித்து வைத்து விடுகிறேன் என்று மடித்து வைத்து விட்டாள்.

Tuesday, May 19, 2009

தொலைபேசி டைரி

தொலைபேசி எண்கள் எழுதியிருந்த பழைய டைரி ஒன்று இருந்தது. தீஷு வார்த்தைகளின் முதல் எழுத்தைக் கூறுவதால், பெயரை சொன்னால், அந்த பெயரின் முதல் எழுத்தைக் கண்டுபிடித்து, அந்த எழுத்தின் பக்கதை எடுக்க வேண்டும். இது முதல் எழுத்தைக் கண்டுபிடிப்பது தான், ஆனால் எப்பொழுதும் போலில்லாமல், சற்று வித்தியாசப்படுத்த இப்படி மாற்றினேன். நான்கைது பெயர்களைக் கண்டுபிடித்ததும், அவளுக்கு எப்படி எண்கள் press செய்கிறோம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. சொன்னதும் புரிந்து கொண்டாள் ஆனால் எண்களை வாசித்து அதை அழுத்தும் அளவிற்கு அவளிடம் வேகமில்லை.

இன்றும் கூட்டல் செய்தோம். சற்றே அவள் ஆர்வத்தைத் தூண்டவும், வித்தியாசப்படுத்தவும் தாயக்கட்டைகள் எடுத்துக் கொண்டோம். முதலில் தாயக்கட்டையை உருட்டி, அந்த எண்களை எழுதி முன்பு செய்தது போல் கூட்டல் செய்ய வேண்டும். விருப்பமாகச் செய்தாள்.

நிறைய நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருக்கும் செயல்முறை இது. மாண்டிசோரி டிரெஸிங் பிரேம் போன்று ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் சோம்பேறித்தனத்தை நான் அறிந்ததால், இன்று தீஷுவின் உடைகளை எடுத்துக் கொண்டு செய்தோம். ஜிப், பட்டன், கூக் போன்று வித்தியசமான உடைகளை எடுத்துக் கொடுத்தேன். கூக் உள்ளதை எளிதாக செய்தாள். அவள் அப்பாவின் பட்டனை போட்டு விடுவாள். ஆனால் இன்று எடுத்துக் கொண்ட உடையில் போட முடியவில்லை. வேறு உடையை மாற்றி கொடுத்தும் அவளால் முடியவில்லை. ஜிப்பை லாக்கில் மாட்ட முடியவில்லை. முன்பு அவள் ஜெர்க்கினில் போடுவாள். இன்று முடியவில்லை. முயற்சி செய்து பார்த்தாள். முடியவில்லை என்றவுடன் எடுத்து வைத்து விட்டாள். சில நாட்கள் கழித்து முயல வேண்டும்.

Monday, May 18, 2009

கவர்ந்த தருணங்கள் 18/5/09

1. தீஷு தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என் கணவரைப் பார்த்து "பிச்சித்தாங்க" என்றாள். ஆபிஸ் கிளம்பும் அவசரத்திலிருந்த அவர், "உனக்குத் தோசையைப் பிக்கத் தெரியாதா?" என்றாள். அவள் மிகுந்த தன்னம்பிக்கையுடன்," எனக்கு ஆக்சுவலா பிக்கத்தெரியும், ஆனால் இப்ப லேசா பிக்க முடியல.." என்றாள்.

2. ஏதாவது டாய்(Montessori activities) சொல்லித்தா என்று வந்தாள். "அம்மா வேலையாயிருக்கேன், கொஞ்ச நேரம் ஆகட்டும்" என்றேன். வேலை முடித்து வந்து உட்கார்ந்த சில நிமிடங்கள் கழித்து வந்து "நீ டாய் சொல்லிக் கொடுப்பானு நான் wait பண்ணிட்டு இருக்கேன்" என்றாள். திரும்பவும் வந்து கேட்காமல், அவள் பார்வையில் சொன்னது பிடித்திருந்தது.

3. மீன் பண்ணையில் மீன் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏதோ தோன்றியவளாக மீன் முள்ளைப் பார்த்து "ஏன் மீன் உடம்புல ஸ்ட்ரா இருக்கு" என்று கேட்டாள்.

4. கோயிலில் பிரசாதமாக பால் கொடுத்தார்கள். என் கணவரிடம் கேட்டாள், "நீ காபி தானா குடிப்ப, ஏன் உனக்கு காபி கொடுக்காம பால் கொடுத்தாங்க" என்று

5. மொட்டைப் போடும் பொழுது அழுததை என் அம்மா, "ஏன்டா அழுத? அழுகை வந்துச்சா? என்றதற்கு "அழுக வரல.. நானா அழுதுட்டேன்" என்றாள்.

6. எங்கு செல்ல கிளம்பினாலும் எதில போகிறோம் என்று கேட்பாள். அன்று கிளம்பும் பொழுது கேட்டதற்கு கார் என்றேன். எதுக்கு கார்ல போகனும், பஸ்லேயே போகலாமே என்றாள். அதைக் கேட்ட என் கணவரின் உறவினர் "அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாள்" என்றார். என் அம்மா "அவள் அம்மா மாதிரியே இருக்கா" என்றார். என் தங்கை "குடும்பமே இப்படியா?" என்றாள்.

Friday, May 15, 2009

கூட்டல்

இன்று தீஷு முதலில் மெக்னெட்டிக் எழுத்துக்களால் எண்கள் உருவாக்கி விளையாட வேண்டும் என்றாள். அனைத்து எண்களையும் சரியாக வாசித்தாள். அவளுக்கு ஒரளவுக்கு இரண்டு இலக்க எண்கள் வாசிக்கத் தெரிகிறது. ஹண்ரட் போர்டு நன்றாக பழகி விட்டால் 99 வரை எழுதுவது சுலபமாக இருக்குமென நினைக்கிறேன்.

இன்று அவளுக்குக் கூட்டல் சொல்லிக் கொடுத்தேன். நிறைய நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் வயதுக்கு இது அதிகமோ என்று தோன்றியது. முயற்சி செய்து பார்க்கலாம் என்று இன்று ஆரம்பித்தேன். இதற்கு மூன்று கிண்ணங்களும் (அதில் ஒன்று கண்ணாடி, மற்ற இரண்டும் ஒன்று போல் இருக்கும்), மற்றும் கண்ணாடி கற்களும் எடுத்துக் கொண்டோம். முதலில் ஒரு நோட்டில் 1 + 2 = என்று எழுதி, கூட்டல் குறி மற்றும் = அறிமுகப்படுத்த, வாசித்துக் காட்டினேன். பின் முதல் கிண்ணத்தில் ஒரு கல்லும், இரண்டாவது கிண்ணத்தில் 2 கற்களும் போட்டேன். இரண்டு கிண்ணங்களில்லுள்ள கற்களையும் மூன்றாவதாக இருக்கும் கண்ணாடி கிண்ணத்தில் கொட்டினேன். இறுதியில் கண்ணாடி கிண்ணத்திலிருப்பதை கீழே கொட்டி எண்ணினேன். பின் நோட்டில் =க்கு அடுத்து எழுதிக் காட்டினேன்.

தீஷு விருப்பமாகச் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வரிசை மாற்ற வில்லை. நான் என்ன சொன்னேனோ அனைத்தையும் செய்தாள். ஒன்பது கணக்குகள் செய்து முடித்து விட்டாள். ஆச்சரியமாக இருந்தது. அந்தத் தாளை தேதியிட்டு பத்திரப்படுத்திவிட்டேன். விருப்பம் இருப்பதால் இனி தினமும் ஐந்து பத்து நிமிடங்களுக்குச் செய்யச் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன்

Thursday, May 14, 2009

பெருசா? சிறுசா?



தீஷுவின் விளையாட்டுப் பொருட்களில் அளவில் மட்டும் வித்தியாசம் உள்ள ஆனால் பார்ப்பதற்கு ஒன்று போலுள்ளப் பொருட்களை இரண்டு இரண்டாக எடுத்துக் கொண்டோம். எடுத்துக் கொண்டவை : ஆப்பிள், மரம், திராட்சை, கார், காரெட், எலுமிச்சை, ஒட்டகச்சிவிங்கி போன்றவை. அனைத்தையும் ஒரு தட்டில் வைத்திருந்தேன். முதலில் தட்டிலிருந்து ஒன்று போலுள்ள இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எது சிறியதோ அதை இடப்பக்கத்தில் வைக்க வேண்டும். பெரியதை வலப்பக்கத்தில் வைக்க வேண்டும். தீஷு விருப்பமாக செய்தாள். நான் போட்டோ எடுப்பதற்குள் முடித்துவிட்டாள். இதன் மூலம் ஒன்று போல் உள்ளவற்றைப் பிரித்தல் (Classification), அளத்தல் (Size measuring & Sorting) அறியப்படுகிறது.

நான்கைந்து நாட்களுக்கு முன்னால் நானும் தீஷுவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதற்கோ உயிருள்ளவை (Living), உயிரற்றவை (Non-Living) பற்றிச் சொன்னேன். அவளுக்கு அதில் விருப்பமிருந்ததால் கேள்விகள் பல கேட்டுக் கொண்டேயிருந்தாள். முதலில் நான் அவளுக்கு எளிதாகப் புரிய வைக்க உயிருள்ளவை பேசும், உயிரற்றவை பேசாது என்றேன். அவளும் வரிசையாக டேபிள், சேர், புக், நாய் என்று கேட்டுக் கொண்டே வந்தாள். மரம் என்றவுடன் உயிருள்ளது என்றேன். அது பேசாது என்றாள். ஆனால் அது வளரும் என்றேன். சேர், புக்கெல்லாம் வளராது என்றேன். அவளுக்குப் புரிந்தது போலிருந்தது. அவளின் புரிதலை அறிய, எடுத்துக் கொண்ட பொருள் உயிருள்ளதா, அற்றதா என்று சொல்ல வேண்டும் என்றேன். முதல் செய்முறைக்கு உபயோகப்படுத்திய பொருட்களையே எடுத்துக் கொண்டோம். வரிசையாக கேட்டுக் கொண்டே வந்தேன். அனைத்தையும் சரியாக சொன்னாள். இதேப் போல் பல முறையில் பிரிக்கலாம். உதாரணத்திற்கு: விலங்குகள் & தாவிரங்கள், காந்தப் பொருட்கள் & இல்லாதவை, கரைபவை & கரையாதவை, மிதப்பவை & முழ்குபவை போன்றவை. ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

Wednesday, May 13, 2009

மதுரை பயணம்

தீஷுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள் பல. இந்த முறை பிறந்தநாளைச் சொந்தங்களுடன் கொண்டாட விரும்பி மதுரைக்குச் சென்றிருந்தோம். தீஷு தன் பிறந்தநாளை ஒரு மாதம் முன்பிலிருந்தே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டாள். தினமும் தனக்கு இன்று தான் பிறந்தநாளா என்பாள். மே 8 என்று சொல்லிக் கொடுத்தவுடன், யார் எப்பொழுது பிறந்த நாள் என்று கேட்டாலும் மே 8 என்று சொல்லி எதிர்பார்த்திருந்தாள். தன் பிறந்தநாளுக்கு சுடிதார் தான் வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.

மே 8 அன்று காலையில் மதுரை சென்று அடைந்தோம். முதலில் எங்களை வரவேற்றது வெயில். அன்று தான் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் என்று நினைக்கிறேன். எதைத் தொட்டாலும் சூடு. அங்கே பிறந்த வளர்ந்த எங்களுக்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. அன்று காலையே திருப்பரங்குன்றம் சென்றோம். அன்று பெளர்ணமி என்பதால் பயங்கரக் கூட்டம். சாமியைப் பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நிதானமாக சென்று வந்த தினங்கள் ஞாபகத்திற்கு வந்து சென்றன.


மே 8 வெள்ளி என்பதால், அலுவலகத்திலிருந்து பல சொந்தங்களுக்கு வர முடியாத காரணத்தால், மே 9 அன்று விழா வைத்திருந்தோம். கேக் வெட்டியப்பின் விளையாட என நான்கைந்து விளையாட்டுகள் யோசித்து வைத்திருந்தோம். ஆனால் நேரமின்மை காரணமாக ஓரிரண்டு மட்டுமே விளையாட முடிந்தது. இந்த முறையேனும் அனைவரின் வாழ்த்துகளையும் தீஷு பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி.



மே 10 அன்று மதுரை அருகிலுள்ள பிள்ளையார்பட்டியில் தீஷுவிற்கு முடி இறக்கினோம். அவள் முறைக்காகக் காத்திருந்த பொழுது தன் முறை எப்பொழுது வரும் என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டேயிருந்தாள். ஆனால் சென்று அமர்ந்தவுடன் அழ ஆரம்பித்துவிட்டாள்.

இவ்வாறு முதல் மூன்று நாட்களுக்குச் சுற்றியதோடு சரி. அதன் பின் இரண்டு நாட்களுக்கு வெளியே வர விடவில்லை வெயில். படித்தப் பள்ளி, கல்லூரி சென்று பார்க்க விருப்பம் உள்ளது. அடுத்த முறையேனும் வெயில் இல்லாத நாட்களில் சென்று மதுரையைச் சுற்றி வர வேண்டும்.

Thursday, May 7, 2009

என்ன தவம் செய்தேன்?

தீஷு,

நாளை (08/05) உனக்கு மூன்று வயது ஆகிறது. என் வாழ்க்கையை நீ பிறந்ததற்கு முன், பிறந்ததற்கு பின் எனப் பிரித்து விடலாம். நீ பிறந்ததற்கு முன் என் பெயர் முன்கோபி. நீ பிறந்ததற்குப் பின் என் பெயர் பொறுமைசாலி. எல்லோரும் நான் உன் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைப் பார்த்து எனக்கு மிகவும் பொறுமை என்கின்றனர். ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும் நான் உன் கேள்விகளால் நிறைய தெரிந்து கொள்கிறேன் என்று. நீ பிறந்ததற்கு முன் நான் படித்த புத்தக வகைகள் - பைனான்ஸ், கனிதம், இயற்பியல் மேலும் பல. பொட்டலம் மடித்து வந்த பேப்பரைக் கூட விட்டு வைத்தது இல்லை. ஆனால் நீ பிறந்ததற்குப் பின் நான் படித்த புத்தக வகைகள் - குழந்தை வளர்ப்பு, மாண்டிசோரி. வீட்டில் தினமும் வந்து விழும் செய்தித்தாளைப் படிப்பதற்குக் கூட நேரமில்லை. எல்லோரும் கேட்கிறார்கள் புத்தகமும் கையுமாக இருந்த நீ இப்பொழுது எப்பொழுதும் குழந்தையும் கையுமாக இருக்கிறாய் என்று. அவர்களுக்குத் தெரியாது நீ புத்தகத்தை விட அதிகம் கற்றுத் தருகிறாய் என்று.

நான் உன்னைச் சுமந்த ஒன்பது மாதங்களில் நீ ஒரு சிரமும் கொடுக்கவில்லை. அப்பொழுது நான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மே 24 தேதி நீ பிறப்பாய் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். நானும் மே 12க்கு அப்புறம் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் எனக்குத் தெரிந்து விட்டது நீ என்னைப் பார்க்க சீக்கிரம் வரப் போகிறாய் என்று. ஆகையால் மே 5 வரை மட்டும் வேலை செய்தேன். மே 8 தேதி நீ பிறந்து விட்டாய்.

மே எட்டாம் தேதி அதிகாலையிலேயே எனக்கு வலி வந்து விட்டது. காலை 4 மணிக்கு டாக்டருக்கு போன் செய்தோம். பரிசோத்தித்துப் பார்க்க வரச் சொன்னார்கள். குளித்து முடித்து ஆறு மணிக்கு நானும் அப்பாவும் சென்றோம். அங்கேயே தங்கச் சொல்லினர். என் வயிற்றில் கருவிகள் மாற்றி உன்னை கவனித்துக் கொண்டனர். மதியம் 1:45 மணி அளவில் டாக்டர் ஓடி வந்தார். உன்னிடம் மூச்சு இல்லை என்றார். இரண்டு மணி நேரம் காத்திருக்கிறீர்களா அல்லது ஆபரேஷன் செய்து விடலாமா என்றார். காத்திருந்தால் உன் நிலைமை என்னவாகும் எனத் தெரியாது என்றார். நானும் அப்பாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் கூட இருவரும் ஒரே நேரத்தில் ஆபரேஷன் என்றோம். எமர்ஜென்ஸி ஆபரேஷனில் சரியாக மதியம் 2 மணிக்குப் பிறந்தாய். டாக்டர் மிகவும் வருத்தப்பட்டார். வலி வந்து முடியும் நேரத்தில் இப்படி ஆகி விட்டதே என்று.

எனக்குப் பெண் குழந்தை என்று ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும். இருபதாவது வார ஸ்கேனிலே உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் நீ உன்னைக் காட்ட விரும்பவில்லை. "Beatiful Girl Baby" என்றும் "Your girl is tall" என்றும் என்னைச் சுற்றி மகிழ்ச்சி சத்தங்கள். என்னால் எல்லாவற்றையும் உணர முடிந்தது. ஆனால் தூக்குகிறாயா என்றதற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். மன்னித்துக் கொள். என்னிடம் ஒரு துளி சக்தி கூட இல்லை. உன் அப்பாவிடம் உன்னைக் கொடுத்தனர். அவர் முகத்திலிருந்த பெருமையை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

நானும் நீயும் ஐந்து மணிக்கு பெட்டுக்கு வந்தோம். ஒன்பது வரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால் ஒன்பது மணிக்கு அழ ஆரம்பித்தாய். அழுதாய் அழுதாய் இரண்டு மணி வரை. நர்ஸ், அப்பா, நான் எல்லோரும் உன்னை மாற்றி மாற்றி சமாதானப்படுத்தினோம். இரண்டு மணிக்குத் தூங்கினாய். அதன் பின் இரவு இரண்டு மணி தூக்கம் எங்களுக்குச் சாதாரணமானது. நர்ஸ் "You are going to have nice time with your girl" என்று கிண்டல் அடித்தாள். மே 10தாம் தேதி காலையில் வீட்டிற்கு வந்தோம். அப்பா டென்ஷனாக கார் ஓடியதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

நீ பிறந்த பொழுது உறவினர்கள் பற்றி சொல்லாததை கவனித்திருப்பாய். இந்தியாவிலிருந்து யாரும் வர முடியவில்லை. நானும் அப்பாவும் உன்னைத் தனியாக தான் வளர்க்க ஆரம்பித்தோம். நாங்கள் அதற்கு முன்னால் பச்சிளம் குழந்தையைத் தூக்கினது கூட இல்லை. நீ தான் அதையும் கற்றுக் கொடுத்தாய்.

இங்கு உன் அப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டும். நீ Colic Baby. முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் மாலை ஆறு முதல் எட்டு வரை அழுவாய். முதலில் பயந்தோம். அப்புறம் பழகிக்கொண்டோம். உன் அப்பா ஆபிஸிருந்து வந்தவுடன் எனக்குச் சாப்பிட கொடுத்து விட்டு, உன்னைத் தூக்கிக் கொள்வார். உன் அழுகையை நிறுத்த இரண்டு மணி நேரமும் நடந்து கொண்டே இருப்பார். பின் எனக்குப் பத்திய உணவு தயாரிப்பார். மீண்டும் இரவு நீ அழ ஆரம்பித்தவுடன் உன்னை சமாதானப்படுத்துவார். முதல் மூன்று மாதங்கள் அவர் தூங்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் உன் முகத்தைப் பார்த்து நாங்கள் இருவரும் எங்கள் கஷ்டங்கள் மறந்தோம்.

மூன்று வருடங்களானது போல் தெரியவில்லை. இந்த மூன்று வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் நம் வாழ்வில். இந்த மூன்று வருடங்களில் நீ இல்லாமல் நானும் அப்பாவும் சேர்ந்து ஒரே ஒரு முறை தான் வெளியே சென்றிருக்கிறோம். அதுவும் ஒவ்வொரு நிமிடமும் உன்னையே நினைத்து உனக்கே பொருட்கள் வாங்கி வந்தோம். அந்த அளவு எங்கள் வாழ்க்கை ஆகி விட்டாய் நீ. நீ என்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ அம்மாவின் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
உன் அம்மா.

Wednesday, May 6, 2009

சாப்பிட வாங்க

தீஷுவிற்கு இன்று கத்தி உபயோகப்படுத்தச் சொல்லிக் கொடுத்தேன். மொட்டைக் கத்தி ஒன்று கிடைத்தது. அதை வைத்து வாழைப்பழம் வெட்டப்பழக்கினேன். இதற்கு முதலில் தோலை உரிக்கச் செய்தேன். பின்னர் கத்தியை எவ்வாறு பிடிக்க வேண்டும் என்பதை செய்து காட்டினேன். விருப்பமாக வெட்டினாள். "கத்திக்கிட்ட கை கொண்டு வரக்கூடாது", "தோல் உரித்து நானே தருவேன்", "கட் பண்ணினதை எடுத்து பத்திரத்தில போடு" - இவை அனைத்தும் நான் காய் வெட்டும் பொழுது அவளிடம் சொல்வது. அவை அனைத்தும் எனக்குத் திரும்ப சொல்லப்பட்டது. வெட்டியப்பின் கத்தியையும், சாப்பிங் பேடையும் கழுவி வைக்கச் சொன்னேன். செய்தாள்.

தீஷு தண்ணீர் ஊற்றுவது, அளந்து ஊற்றுவது முதலியவற்றை விரும்பமாகச் செய்வதால் தினசரி வாழ்வில் அவை எவ்வாறு உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை உணர்த்த சாதம் வைக்கப் பழக்கலாம் என்று எண்ணினேன். அதற்கு முதல் படியாக குக்கர் மூடவும் திறக்கவும் சொல்லிக் கொடுத்தேன். அவளுக்கு மூடிவதற்கு சிரமமாக இருக்கிறது. எளிதாக திறக்கிறாள். குக்கரைக் கொடுத்தவுடன் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் தன் கற்பனை விளையாட்டுக்களை ஆரம்பித்து விட்டாள். இன்னும் அரிசியாத்தான் இருக்கு. குக்கர் சூட இருக்கு தொடாத போன்றவை. விரும்பமாகச் செய்தாள்.

பன்சிங் மிஷின் உபயோகப்படுத்தச் செய்து காட்டினேன். எவ்வாறு பேப்பரை வைக்க வேண்டும் என்பதிலிருந்து ஆரம்பித்தேன். ஆர்வத்தைக் கூட்டுவதற்காக பேப்பரை முதலில் இரண்டாக மடித்து பன்ச் செய்தோம். முடித்தப்பின் பேப்பரை விரித்துக் காட்டினேன். அடுத்து அடுத்த பேப்பரை மூன்று முறை மடித்து செய்யச் சொன்னேன். முடிவில் அவளுக்கு பன்ச் செய்வதை விட பேப்பர் மடிப்பதில் விருப்பமாகி விட்டது. கிட்டத்தட்ட பேப்பரின் ஓரங்களை இணைத்து மடிக்கிறாள். அரை மணி நேரம் வரை வெவ்வேறு வடிவங்களில் மடித்துக் கொண்டே இருந்தாள்.

எங்க வீடும் தோட்டமும்

கடந்த ஒரு மாதமாக நான் என் கணவரிடம் சொல்வது - வாரயிருதியில் தீஷுவுடன் ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி செய்ய வேண்டும் என்று. "Day with Daddy" என்று அதற்கு நான் பெயரும் வைத்து விட்டேன். அவர் ஒத்துக் கொண்டாலும், தீஷுவின் உடல் நலக்குறைவு, வாரயிறுதி வேலைகள் போன்றவற்றால் அவர்களால் செய்ய முடியவில்லை. கடந்த வாரயிறுதியில் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், இரண்டு வேலைகள் செய்து முடித்து விட்டார்கள்.



ஃப்ரிட்ஜ் வந்த அட்டைப்பெட்டியை தீஷுவிற்கு ஒரு சிறிய வீடு போல் வடிவமைத்துத் தந்தார். செய்யும் பொழுது இது என்ன பெரிய விஷயமா என்று எனக்குத் தோன்றியது. ஆனால் தீஷுவிற்கு மிகவும் பிடித்து விட்டது. தன் விளையாட்டுப் பொருட்களை வீட்டிலுள் எடுத்துச் சென்றே விளையாடுகிறாள். வீடு தயார்யானவுடன் தீஷு கேட்ட முதல் கேள்வி "வீட்டுக்கு எங்கிருந்து கரெண்ட் வரும்?".



பெங்களூரில் இப்பொழுது அடிக்கடி மழை பெய்கிறது. அப்பாவும் பெண்ணும் மிளகாய், முள்ளங்கி போன்ற செடிகளை வைத்திருக்கிறார்கள் (இது நாங்கள் வசிக்கும் வீட்டின் முன், அட்டை வீட்டில் இல்லை). முள்ளங்கி வேர் மூலம், மிளகாய் விதையிலிருந்து வரும் என்பது தீஷுவிற்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். குழி தோண்டுவது மட்டும் தான் தந்தையின் வேலை (அதிலும் பாதி தான் தான் செய்வேன் என்றாள்). மிளகாய் உரித்து விதை எடுத்தது, விதையைத் தூவியது, குழியை மூடி தண்ணீர் விட்டது என அனைத்தையுமே தீஷுவே செய்தாள். இருவரும் தண்ணீரும் விடுகின்றனர். செடிகளின் வளர்ச்சியைத் தெரிவிக்கிறேன்.

Monday, May 4, 2009

இன்று நாங்கள் செய்தது

நான்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் செய்தோம். இன்று மீண்டும் மாக்னெட்டிக் எழுத்துக்களால் இரண்டு இலக்க எண்கள் உருவாக்கி, அவளை வாசிக்கச் சொன்னேன். முனபு இடதிலிருந்து வலதிற்கு வாசிக்காமல், வலதிலிருந்து இடதிற்கு வாசித்தாள். இன்று அவ்வாறு செய்யவில்லை. முழுவதுமாக புரிந்து கொண்டாளா அல்லது இன்று மட்டும் ஏதோ அதிர்ஷடத்தில் நடந்ததா என்று இன்னொரு முறை செய்தால் தான் தெரியும்.


தீஷு பொனிக்ஸ் முறையில், எழுத்துக்களைப் படிக்கிறாள். ஆனால் அதை வார்த்தையாகச் சேர்த்துச் சொல்லத்தெரியவில்லை. உதாரணத்திற்கு CAT என்பதை cuh-auh-tuh என்கிறாள். ஆனால் CAT என்று சொல்லத்தெரியவில்லை. அதனால் இன்று மூன்று எழுத்து வார்த்தைகளுடைய படங்களை ஐந்து(CAT, DOG, PIG, OWL, FOX) எடுத்துக் கொண்டேன். நான் cuh-auh-tah என்று சொன்னேன். அவள் வார்த்தையைக் கண்டுபிடித்து, அந்த படத்தை எடுத்துத் தர வேண்டும். கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டாள். சிறிது நாட்களுக்குப் பின் முயற்சி செய்ய வேண்டும்.


தீஷுவிற்கு எழுதப் பழக்குவதற்கு முன், மாண்டிசோரி முறையின் உப்புத்தாளை ஒத்த உபகரணத்திற்காக நான் செய்தது இந்த Felt எழுத்துக்கள்.
தீஷு இதை உபயோகப்படுத்தவே இல்லை. ஒரு மூலையிலிருந்த அதை இன்று உபயோகப்படுத்தினோம். நான் எடுத்துக்கொடுக்கும் அட்டையை கண்களை மூடிக் கொண்டு, தடவிப் பார்த்து எழுத்தைச் சொல்ல வேண்டும். நான் அட்டையைக் குடுத்தவுடன், கையால் முழு அட்டையையும் தடவியே எழுத்துகளை கண்டுபிடித்து விட்டாள். மிகவும் விருப்பமாகச் செய்தாள்.



எப்பொழுதும் செய்யும் இந்த பொனிக்ஸ் விளையாட்டை, இப்பொழுது எப்படி விளையாட வேண்டுமோ அவ்வாறு விளையாடுகிறாள். முதலில் ஒரு படத்தை எடுத்துக் கொண்டு, அதன் முதல் எழுத்தைக் கண்டுபிடித்து, அதன் எழுத்தில் சேர்க்கிறாள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost