
ஓவியர்கள் உபயோகப்படுத்தும் ஈசல் (Easel) குழந்தைகள் அளவில் கிடைப்பதை குழந்தைகள் உபயோகித்தால் நன்மைகள் உண்டு என்று படித்தேன். இது செக்குத்தாக இருக்கும். குழந்தைகள் கையைத் தூக்கி வரைவதால், அவர்களின் தோல் எலும்புகள் பலப்படும். அது அவர்கள் எழுதுவதற்கு மிகவும் அவசியம் என்று படித்ததிலிருந்து ஈசல் மேல் ஒரு கண். ஆனால் வீட்டில் வைப்பதற்கு இடமில்லை. அதனால் சுவத்தில் ஒரு நீண்ட பேப்பரை ஓட்டிக் கொடுத்தேன். ஆனால் அதில் பெயிண்ட் செய்யும் பொழுது சுவத்தில் பட்டு விடுமோ என்று பயம் இருந்து கொண்டிருந்தது. சுவத்தில் பெயிண்ட் போகவில்லை என்றால் காலி பண்ணும் பொழுது இருக்கப் போகும் செலவை நினைத்துப் பேப்பரை எடுத்து விட்டேன்.
அதன் பின் கண்ணாடி கதவு எங்கள் ஈசல் ஆனது. கண்ணாடியில் வரைய கரையான்ஸ் கிடைத்தாலும், துடைத்தால் கலர் முழுவதுமாக போகுமா என்று தெரியாததால் அதை முயற்சி செய்யவில்லை. ஒரு முறை டேப்பைக் கிழித்து ஒட்டினோம். அது தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
பின்பு ஒரு முறை ஃபோம் வடிவங்களை தண்ணீர் தொட்டு ஒட்டினோம். வடிவங்கள் தண்ணீர் காயும் வரை ஒட்டியிருந்தன. ஒட்டுவதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது.
ஒரு கனமான பெரிய அட்டை டப்பா கிடைத்தது. இப்பொழுது அது தான் எங்கள் ஈசல். மூன்று பக்கங்கள் மூடியும் ஒரு பக்கம் மூடாமல் இருக்கும் ஒரு திறந்த டப்பா. அதன் திறந்த பக்கத்தை கதவின் ஹாண்டிலில் மாட்டி விட்டேன். பின் பகுதியில் பேப்பர் குத்திவிட்டேன். அதில் வரையலாம். பெயிண்ட் பட்டு விட்டாலும் டப்பாவை மாத்தி விடலாம். எப்பொழுதும் உட்கார்ந்து கொண்டு குனிந்து வரையும் தீஷுவிற்கு நின்று கொண்டே வரைவது பிடித்திருந்தது. ஒரு ஒட்டகச்சிவிங்கி நின்று ஒரு பூவை வேடிக்கைப்பார்ப்பது போன்று வரைந்திருந்தாள்.
இதுவும் ஒரு நிரந்தர தீர்வு இல்லை. ஆனால் ஈசலின் நன்மைக்காக செங்குத்தான பொருட்களில் வேலை செய்வதை வெவ்வேறு வழிகளில் ஊக்குவிக்க நினைத்திருக்கிறேன்.



3 comments:
Good idea.
very nice and colorful :-)
Thanks Chitra.
Thanks Grace
Post a Comment